உண்மையில் அம்மாக்கள்தான் முதல் பல்கலைகழங்கள்...
ஐ லவ் யூ அம்மா....
நம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் நம் எல்லோருக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய அரசுக்கு இந்த ஊழல் நடவடிக்கையால் வருவாய் இழப்பு ரூபாய் 1,76,000 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கணக்குகள் தணிக்கைத் துறையின் அறிக்கை, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே, இந்த ஊழல் விவகாரம் அரசியல் கட்சிகளாலும், பத்திரிகைகளாலும் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. ஆனால், 'CAG அறிக்கை' எனப்படும், தணிக்கைத் துறையின் விவரமான அறிக்கை வெளிவந்த பின், எதிர்ப்புகள் உச்சகட்டத்தை அடைந்து, சம்பந்தப்பட்ட அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார்.
இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விவரங்கள் மிகவும் கடுமையான விதிமீறல்கள், ஊழல்கள் பற்றியதாக உள்ளன. இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களில், இதுவே மிகப் பெரிய ஊழல் என்று பலராலும் கருதப்படுகிறது.
நம் நாட்டில் தொலைபேசிகள் – லேண்ட் லைன் எனப்படும் கம்பிகளின் மூலம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் 1994 வரை இயங்கி வந்தது சரித்திரம். அதன் பின், முதல் முறையாக, பிற நாடுகளில் ஏற்பட்ட விஞ்ஞான முன்னேற்றத்தின் புதிய கண்டுபிடிப்புகளினால் 'ஒயர்லஸ்' எனப்படும் கம்பியில்லா டெலிஃபோன்களையும், 'கைபேசி' எனப்படும் செல்ஃபோன்களையும் உருவாக்க கொள்கை முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில்தான், பொருளாதார தாராளமயக் கொள்கையும், பெரிய அளவில் அமலுக்கு வந்தது. இதனால், அதுவரை மத்திய அரசின் ஏக போகத்திலிருந்த டெலிஃபோன் தொழிலில், தனியார் கம்பெனிகளையும் அரசு ஈடுபடுத்தியது.
ஒயர்லெஸ் செல்ஃபோன்கள் இயங்க, 'ஸ்பெக்ட்ரம்' என்ற அலைக்கதிர்கள் அவசியம். அதாவது, வானவெளியில், இயற்கையிலேயே 'ரேடியோ ஃப்ரீக்வன்ஸி ஸ்பெக்ட்ரம்' எனும் அலைவரிசை உள்ளது. இது உலகெங்கிலும் வியாபித்திருப்பதால், இதை உபயோகித்து ஒயர்லஸ் கருவிகள் மூலம் செல்ஃபோன்களை இயக்கலாம். இதைப் பன்னாட்டு டெலிஃபோன்கள் சங்கம் (ஐ.டி.யு.) என்ற அமைப்பு, எந்த நாட்டிற்கு எந்த அளவு அலைக் கதிர்கள் என்று நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யும்.
நம் நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை 9 KHz (கிலோ ஹெர்ட்ஸ்) முதல் 400 GHz (கிகா ஹெர்ட்ஸ்) வரை.
ஒரு நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட அலைவரிசையில் மற்ற நாடு இயங்கக் கூடாது. காரணம், ஒன்றையொன்று பாதித்து, மொத்த உபயோகமும் தடைப்பட்டு விடும். இதுபோன்ற அலைக் கதிர்களை, பெரும்பாலும் இந்திய ராணுவம் பழைய காலங்களில் தங்கள் தொலைத் தொடர்புக்கு ஒயர்லஸ் கருவிகள் மூலம் பயன்படுத்தி வந்தது. பின், அவை தனியார் மற்றும் அரசு தொலைபேசி கம்பெனிகளின் செல்ஃபோன் உபயோகத்திற்கு ஒதுக்கி விடப்பட்டன. இவற்றைத் தனியார் கம்பெனிகளுக்கு விடுவதில் 2001ஆம் ஆண்டு குறிப்பிட்ட ஒருமுறை பின்பற்றப்பட்டது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட தொகை, அலைவரிசை லைசென்ஸ் தொகையாக வசூலிக்கப்பட்டது.
அந்த ஆண்டு முதல் தனியார் கம்பெனிகள் செல்ஃபோன்களை அறிமுகம் செய்தன. யாருமே எதிர்பாராத வகையில் செல்ஃபோன்கள் உபயோகம் நம் நாட்டில் அதிகரித்தது. இதில் உலகிலேயே நம் நாடு இரண்டாவது இடம் என்றும், சைனாவுக்கு அடுத்து உலகிலேயே அதிக செல்ஃபோன்கள் உள்ள நாடு இந்தியா என்றும் சர்வே கூறுகிறது.
2001ஆம் ஆண்டு, முதலில் இரண்டு வகையான ஒயர்லஸ் அலைக் கதிர்கள், சி.எம்.டி.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம். அமல்படுத்தப் பட்டன. பெரிய கம்பெனிகள், சில சி.எம்.டி.ஏ. சர்வீஸை விட ஜி.எஸ்.எம். வளர்ச்சியே சிறந்தது என்ற கணக்குடன், தங்களுக்கும் புதிய ஜி.எஸ்.எம். லைசென்ஸ்கள் வேண்டும் என்ற வகையில் காய் நகர்த்தின.
இதே வேளையில், இரண்டு விஷயங்கள் உருவாயின. ஒன்று செல்ஃபோன்களின் உபயோகம் மிகவும் அதிகமானது. மேலும், எஸ்.எம்.எஸ். என்ற செய்திக் குறிப்புகள் போக, புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பரிமாறிக் கொள்ளுதல் போன்ற புதிய அம்சங்கள் விஞ்ஞான வளர்ச்சியினால் உருவாயின. இதுபோன்ற சேவைகளுக்கு, அலைக்கதிர்களின் அடுத்த தலைமுறை, இரண்டாம் ஜெனரேஷன் எனப்படும் 2ஜி திட்டமிடப்பட்டது.
இந்த 2 ஜி அலைக்கதிர் ஒதுக்கீடு வருவதைத் தெரிந்து கொண்டு, ஏற்கெனவே டெலிஃபோன் வியாபாரத்தில் இங்கு இயங்கி வரும் இந்தியக் கம்பெனிகளும், வெளிநாட்டுக் கம்பெனிகள் சிலவும், டெலிஃபோன் வியாபாரத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத பல கம்பெனிகளும் தீவிரமாகக் களத்தில் இறங்கி, லைசென்ஸ் பெற முயற்சித்தன.
பல கோடி ரூபாய்கள் கைமாறி, பல விதிமீறல்களின் மூலம், சிலர் லைசன்ஸ் பெறுகின்றனர். இதில் நடைபெற்ற முறைகேடுகளில் முதன்மையானது, 2001ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட லைசென்ஸ் கட்டணத்தையே 2008ஆம் ஆண்டு வசூலித்ததுதான்.
2001– ஆம் ஆண்டு நம் நாட்டில் டெலிஃபோன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருந்தது. 2008 ஆம் ஆண்டு 35 கோடி சந்தாதாரர்களாக அது உயர்ந்தது. எனவே, 2001 ஆம் ஆண்டு ஒரு செல்ஃபோன் / டெலிஃபோன் கம்பெனியின் வியாபார வருமானம் எவ்வளவு இருந்திருக்க முடியுமோ, அது சுமார் 88 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், 2001 ஆம் ஆண்டு விதித்த லைசென்ஸ் கட்டணத்தைத்தான் நான் வசூலித்தேன் என்று அத்துறையின் அமைச்சர் கூறுகிறார்.
அது எவ்வளவு தூரம் தனியார் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபம் ஈட்டித் தந்தது என்பதைக் கணக்கிட்டுள்ளது தணிக்கைத் துறையின் அறிக்கை. ஸ்வான் என்ற கம்பெனி இதற்கு முன் டெலிஃபோன் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி. அமைச்சரின் உதவியுடன் 13 சரகங்களுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வெற்றிகரமாகப் பெற்ற கம்பெனி இது. ஒதுக்கீடு லைசென்ஸ் பெற்று சேவையை தொடங்கும் முன்னரே, தனது பங்குகளில் 50 சதவிகிதத்தை ரூ.3597.50 கோடிக்கு விற்று விட்டது இந்தக் கம்பெனி. அதன்படி பார்த்தால், இக்கம்பெனியின் மொத்த மதிப்பீடு ரூபாய் 7195 கோடி.
இந்த மதிப்பீட்டைக் கூர்ந்து நோக்கினால், இந்தக் கம்பெனியிடம் செல்ஃபோன் சேவையை வழங்குவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் கிடையாது என்பது தெரியும். அதாவது, எல்லா இடங்களிலும் ஆயிரக்கணக்கான செல்ஃபோன் டவர்கள், மற்ற பல கருவிகள் வாங்க, இதுபோன்ற ஒரு கம்பெனிக்கு ரூபாய் 25,000 கோடி முதல் 35,000 கோடி வரை தேவைப்படலாம்.
இதில் எதையும் செய்யாமல், இக்கம்பெனியின் மதிப்பீடு ரூபாய் 7195 கோடி என்றால், அந்த முழுத் தொகையும் இந்தக் கம்பெனி பெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசையின் மதிப்பீடுதான். அந்த மதிப்பீட்டிற்கு இந்தக் கம்பெனி அரசுக்குச் செலுத்திய லைசென்ஸ் கட்டணம் ரூபாய் 1651 கோடி மட்டுமே.
இதைப் போலவே யுனிடெக் என்ற கம்பெனி, ரூ.6120 கோடி மதிப்பீடுள்ள 2ஜி அலைவரிசைகளை ரூ.1651 கோடி செலுத்திப் பெற்றுள்ளது. இந்த வகையில் 2008ஆம் ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத்துறை 122 லைசென்ஸ்களை வழங்கியுள்ளது என்றால், அவற்றால் அரசிற்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்பை நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
மேலும், இந்த 122 லைசென்ஸ்களில், 85 லைசென்ஸ்கள், தகுதியில்லாத கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பல கம்பெனிகள் தவறான தகவல்களை அளித்திருந்தும், அவற்றை வேண்டுமென்றே, சரியானபடி ஆய்வு செய்து நிராகரிக்காமல், லஞ்ச ஊழல் காரணமாக லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதுபோக, லைசென்ஸ் வழங்க தவறான ஒரு அணுகுமுறையும் கையாளப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வரை மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு 575 விண்ணப்பங்கள் வந்தன. அமைச்சரின் தலைமையில் அதிகாரிகள் கூடி, 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி வரையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள்தான் பரிசீலிக்கப்படும் என்று கூறி விட்டனர். அதன்படி, 232 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த விண்ணப்பங்களின் குறைபாடுகளை எல்லாம் சரியாக ஆராயாமல், ஒரே நாளில் 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 10ஆம் தேதி 122 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இந்தக் கம்பெனிகள் இவ்வாறு லைசென்ஸ் பெறுவதற்குத் தேவையான தொகையை, அன்றைய தினமே செலுத்த வேண்டும் என்ற பத்திரி கைச் செய்தியை, மதியம் 2.45 மணிக்கு மத்திய தொலைத் தொடர்புத் துறை வெளியிடுகிறது. ஆனால், செலுத்த வேண்டிய கடைசி நேரம் மதியம் 3.30 மணி. அதாவது வெறும் 45 நிமிடங்களில்!
நமது கிராமங்களில், கிராம அதிகாரிகளிடமோ அல்லது பஞ்சாயத்து அலுவலகத்திலோ வரி செலுத்தும் போதுகூட, இதுபோன்ற கோமாளித்தனமான அறிவிப்புகள் வருவது இல்லை. அகில இந்தியா அளவிலும் வேறு பல நாடுகளிலுமுள்ள பல டெலிஃபோன் கம்பெனிகளுக்கு, லைசென்ஸ் வழங்கியதைக் கூர்ந்து நோக்கும்போது, ஸ்பெக்ட்ரம் அலைக்கதிர் ஒதுக்கீட்டு நடைமுறையில் இதுபோன்ற கோமாளித்தனங்கள் நடந்திருப்பதைக் கண்டு, எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதை விடவும் கேலிக்குரியது – சில கம்பெனிகள் அன்றைய தினத்தில் (10.1.2008) 45 நிமிடங்களில் சரியான தொகைக்கு பேங்க் டிராஃப்ட்டை தொலைத் தொடர்புத் துறைக்குக் கொடுத்துள்ளன. இந்த டிராஃப்ட்கள் ஏற்கெனவே பல நாட்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டிருந்ததாம். ஒரு கம்பெனியின் டிராஃப்ட் மும்பை வங்கி ஒன்றில் எடுக்கப்பட்டிருந்ததாம்.
ஆக, என்ன மாதிரியான அறிவிப்பு வரும் என்பதை இவர்கள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. அதாவது, சரியான சிபாரிசுடன், கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்தால், நடைமுறைகள் எப்படி இருக்கும், என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னரே தெரிவித்து விடுவார்கள் என்பது ஊழல் நடவடிக்கையின் அடிப்படை.
லைசென்ஸ் வழங்குவதில் முதலில் வருபவர்களுக்கு முதலில் உரிமை என்ற நடைமுறை என்றால் - (ஃபர்ஸ்ட் கம் ஃபர்ஸ்ட் சர்வ்ட்) விண்ணப்பங்கள் தபாலில் பெறப்படும்போது, அவற்றை ரெஜிஸ்டரில் வரிசையாக எழுதி, வரிசையாக டோக்கன் எண்ணிட்டு, அதன்படி வரிசைக்கிரமமாக பரிசீலனை செய்யப்படும்.
இதுவரையிலும் மத்திய அரசின் துறைகளில் நடைமுறையில் இருக்கும் பழக்கம் லைசென்ஸ் கொடுக்கும்போது, விண்ணப்பங்களை இது போல் பரிசீலனை செய்தபின் முதலில் LOI எனப்படும் Letter of Intent என்ற முதல் கட்ட அனுமதி வழங்கப்படும். அதைப் பெற்றுக் கொண்டவர்கள், டெபாசிட், லைசென்ஸ் தொகை, இருப்பிடச் சான்றிதழ் போன்ற பல சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு முழுமையாக லைசென்ஸ் வழங்கப்படும். ஆனால், இதன்படி Letter of Intent பெற்றவர்கள் 2008-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி, முக்கால் மணி நேரத்தில் எல்லா சான்றிதழ்களையும் வழங்குமாறு பத்திரிகைச் செய்தி அனுப்பப்பட்டது.
இதன்படி பயில்வான்கள் போன்ற அடியாட்கள் கம்பெனிகளின் சான்றிதழ்களையும், வங்கி ட்ராஃப்ட்களையும் கொண்டு வந்து முண்டியடித்துக் கொண்டு கௌண்டரில் செலுத்திய கேலிக் கூத்து, 2008-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி தொலைத் தொடர்புத் துறையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அரசுக்கு வேண்டியவர்களுக்கும், கையூட்டுப் பெற்றவர்களுக்கும் செய்யப்பட்ட வசதி இது என்பது சொல்லாமலே தெரியும்.